பொலிஸ் ஊடகப்பிரிவில் நிர்வகிக்கப்படும் Sri Lanka Police உத்தியோகபூர்வ யூடியுப் சேனலில் ஒரு இலட்சம் இணைப்பாளர்களை (Subcribes) அடைந்ததைத் தொடர்ந்து யூடியுப் நிறுவனத்தினால் வழங்கப்படும் சில்வர் ப்ளே பட்டன் (Silver Play Button) விருதைப் பெற்றுள்ளது.
2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலை, பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளருமான எஃப்.யூ.வுட்லர் அவர்களும் பொலிஸ் ஊடகப் பிரிவின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மேற்பார்வை அதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் ஆகயோர் இணைந்து சில்வர் ப்ளே பட்டன் (Silver Play Button) விருதை பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர்.
இதன்போது பொலிஸ்மா அதிபர் கருத்து தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு, மனிதாபிமான மற்றும் சமூக சேவைகள் தொடர்பாக தெளிவூட்டும் நோக்கில், இலங்கைப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தயாரிக்கப்படும் காணொலிகள் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்துடன், “இந்த விழிப்புணர்வு மற்றும் தகவல்பரப்பு நடவடிக்கைகள், குறுகிய காலத்திலேயே இலங்கை பொலிஸ் YouTube சேனலுக்கு 100,000 இற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பாளர்களைப் பெற்றுத் தந்த முக்கிய காரணிகளாகும். இது பொலிஸ் ஊடகப்பிரிவின் தனித்துவமான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இச் சாதனை, இலங்கைப் பொலிஸ் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான தொடர்பாடலை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் தரமான, நேர்மையான மற்றும் பொது நலனுக்கான தகவல்களை வழங்கும் அரச நிறுவனமாக இலங்கைப் பொலிசின் கௌரவத்தை இந்த வெற்றி மேலும் உயர்த்துகிறது” என்றும் “எதிர்காலத்தில் YouTube சேனலை மேலும் பயனுள்ள மற்றும் மக்களை ஈர்க்கும் தகவல் ஊடகமாக மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.